சாதிக் கொடுமையின் மற்றொரு சாட்சி!
மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலைச் சம்பவம் ஏற்படுத்தும் அதிர்ச்சியும் துயரமும் அளவிட முடியாதவை. தகுதியும் திறமையும் மிகுந்தவர்கள் என்று கருதப்படுவோரால் நிர்வகிக்கப்படும் உயர் கல்வி நிறுவனமான இப்பல்கலைக் கழகத்தில் பயிலும் ரோஹித் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். துடிப்பான ஆய்வு மாணவர்.
‘அம்பேத்கர் மாணவர்கள் சங்கம்’ (ஏ.எஸ்.ஏ.) என்ற அமைப்பின் உறுப்பினர். இச்சங்க உறுப்பினர்களுக்கும் சங்கப் பரிவாரத்தைச் சேர்ந்த ‘அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்’ (ஏ.பி.வி.பி.) என்ற அமைப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
பரிஷத் மாணவர்களின் புகாரின்பேரில் ஏ.எஸ்.ஏ. அமைப்பைச் சேர்ந்த ரோஹித் உள்பட 5 மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப் பட்டனர். ‘இந்த 5 மாணவர்களும் பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடரலாம் ஆனால் விடுதிக்கோ, நிர்வாக அலுவலகத்துக்கோ, இதர பொது இடங்களுக்கோ செல்லக்கூடாது’ என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. சமூகரீதியாக பின்னடைவைச் சந்தித்துள்ள சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்தத் தண்டனை அப்பட்டமான சமூகப் புறக்கணிப்பு என்பதில் சந்தேகமில்லை.
இதற்கு எதிராக 5 மாணவர்களும் போராட்டம் நடத்திவந்தனர். இந்த நிலையில்தான் ரோஹித் வெமுலா என்ற அந்த ஆய்வு மாணவர் தன்னுடைய போராட்டத்தையும் வாழ்க்கையையும் ஒரேயடியாக முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறார். தன்னுடைய தற்கொலைக்கு யாரும் பொறுப்போ, காரணமோ அல்ல என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், உண்மை அதுதானா?
அம்பேத்கர் மாணவர்கள் சங்கம் என்ற அமைப்பில் தீவிரவாதிகளும் தேச விரோதிகளும் இடம் பெற்றிருப்பதாகவும் அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேய மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எழுதிய கடிதத்தை அடுத்தே தற்கொலை நடந்தது என்று மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது பண்டாரு தத்தாத்ரேய, ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் பி. அப்பா ராவ் மற்றும் ஏ.பி.வி.பி.யைச் சேர்ந்த 2 தீவிர உறுப்பினர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரோஹித் தின் மரணம் குறித்து மனசாட்சியுடன் விசாரணை நடத்தி உண்மை களைக் கண்டறிய வேண்டும். சாதி ஆதிக்கத்தையும் சாதிப்பாகுபாட்டை யும் தடுக்க நாம் தொடர்ந்து தவறிவருகிறோம் என்ற அவலத்தையே இது இந்திய அரசுக்குப் பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது.
டெல்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ என்கிற அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பட்டியல் இன, பழங்குடி மாணவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தர சில ஆண்டுகளுக்கு முன்னால் பணிக்கப்பட்ட தோராட் குழு, பல அவலங் களை அம்பலப்படுத்தும் உண்மைகளை வெளிக்கொணர்ந்தது. பட்டியல் இன, பழங்குடி மாணவர்கள் விடுதியின் ஒரு புறத்தில் ஒதுக்கிவைக்கப்படுகின்றனர், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் மற்றவர்களுடன் சமமாகப் பங்கேற்க முடியாமல் ஓரம்கட்டப்படுகின்றனர் என்று அது கூறியிருந்தது.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 18 மாணவர்கள் இப்படி உயர் கல்விக்கூடங்களில் தங்களுக்கு நேர்ந்த அவமானங்களையும் சமூகப் புறக்கணிப்புகளையும் தாங்கிக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இந்த அவலத்தை நீக்க வேண்டும் என்றால் முதல் படியாக அரசு, இப்படியொரு நிலை நிலவுகிறது என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும். ஆத்மசுத்தியுடன் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும்!
நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்