2016 சட்டமன்ற தேர்தலுக்கான லோக்சத்தா கட்சியின் தேர்தல் அறிக்கை:
3) #வேளாண்மை
வாங்கிய கடனை அடைக்க முடியாமல் #விவசாயி தற்கொலை, டிராக்டர் வாங்கியதற்கு வங்கிக்கு வட்டி கட்ட முடியாத விவசாயி மீது காவல்துறை தாக்குதல் போன்ற விவசாயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை நாம் விவசாயிகள் பழி வாங்கப்படுகிறார்கள் என்பது போல உணர்ச்சிகரமான பிரச்சனையாக பார்கிறோமே ஒழிய ஏன் விவசாயியால் கடன் கட்ட முடியாமல் போனது? விவசாயம் ஏன் லாபகரமான ஒரு தொழிலாக நம் நாட்டில் இல்லை? என்பது போன்ற தீர்வு நோக்கிய அறிவார்ந்த கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை.
நம் மேலோட்டமான சிந்தனையில் விவசாயம் லாபமீட்ட முடியாத ஒரு தொழில், எல்லா விவசாயிகளும் ஊருக்கெல்லாம் சோறு போட தங்கள் வாழ்வை தியாகம் செய்கிறார்கள் என்பது போலவும், விவசாயம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் நகரமயமாதலும், விவசாயத்தில் தொழில்நுட்ப வளர்சிகள் மற்றும் பெரும் தொழிற்சாலைகள் ஆகியன விவசாயத்திற்கு எதிரான ஒன்று என்பது போலவும் பலவாறான கருத்துக்கள் உள்ளன.
உண்மையில் நம் நாட்டில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கான தீர்வு பல்முனை நோக்கோடு அணுகப்பட வேண்டும். பல்வேறு முன்னேறிய நாடுகளில் கையாளப்படும் உக்திகளை நாம் கையாள வேண்டும். இதற்கு லோக்சத்தா கட்சி அளிக்கும் தீர்வுகள்:
1. உழவர்களுக்குத் தங்கள் விளைபொருட்களின் விலையை நிர்ணயம் செய்வதில் முழுச் சுதந்திரம் அளிக்கப்படும்.
2. விற்பனை வலயத்தில் இடைத்தரகர்களின் பங்கைக் குறைத்து, உழவர்களுக்கும் நுகர்வோர்க்கும் உள்ள இடைவெளி குறைக்கப்படும். இதனால் உழவர்களுக்கும் நுகர்வோருக்கும் விரும்பும் வகையில் பொருட்களின் விலை அமையும்.
3. மட்கும் விளைபொருட்களான காய்கறி மற்றும் பழங்கள் வீணாவதைக் கட்டுப்படுத்த, முறையான போக்குவரத்து, குளிரூட்டப்பட்ட கிடங்குகள், பதபடுத்துதல் ஆகியவற்றில் முதலீடு செய்யப்படும்.
4. வேளாண் தொழிற்சாலைகள் அமைக்கப்பெற்று, விளைபொருட்களுக்கான குறைந்த பட்சக் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுவதன் மூலம், சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்படும்போது, உழவர்கள் பாதுகாக்கப்படுவர்.
5. ஒவ்வொரு 3000 ஏக்கர்களுக்கும் ஒரு வேளாண்சாலை அமைக்கப்பெற்று, தரமான விதைகள், வேளாண் கருவிகள், விற்பனை ஏற்பாடுகள், இலவச மண் பரிசோதனை, இலவச கால்நடை சேவைகள் எல்லா நேரமும் அளிக்கப்படும்.
6. ஒவ்வொரு உழவருக்கும் கூட்டுறவு மற்றும் வர்த்தக வங்கிகளில் கணக்கு உருவாக்கப்பட்டு, எளிமையான முறையில் கடனுதவி பெற வழி செய்யப்படும்.
7. பயிர்ச் சாகுபடியைப் பெருக்கிட, உழவர்களுக்குப் புதுத் தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்கப்படும்.
8. மரபணு மாற்ற விதைகள்: மரபணு மாற்றப்பட்ட விதைகள் பாதுகாப்பானதா இல்லையா என்பதை அறிவியலாளர்களே முடிவு செய்ய வேண்டும். அவ்விதைகளின் மூலம் பெறப்படும் சாகுபடி கூடியுள்ளதா இல்லையா என்பதை உழவர்களே முடிவுசெய்வர். அவர்கள் இவ்விதைகளைப் பயன்படுத்த விழைவார்களேயானால், எந்தச் சட்டத் தடையுமின்றி அது அனுமதிக்கப்படும்.
#லோக்சத்தா_தேர்தல்_அறிக்கை
இணையம் – http://tn.loksatta.org/
லோக்சத்தாவை முகநூலில் தொடர – https://www.facebook.com/loksattapartytn/
லோக்சத்தா வாட்ஸ்அப் எண் – 9791050511